வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம்அடிப்படைவாதம் நம்மை தரதரவென்று இழுத்துப்போய் ஒரு ’மாயாலோக’த்துக்குள் நிறுத்திசாம்பிராணிப்புகை போட்டுவிடுகிறது. ரியர்வியூ மிரரில் தெரியும் ரியல் எதிரிகளை கண்டும் காணாமல் இருக்கவைத்து கற்பனையான எதிரிகளின் மேல் கைவாளை வீசச்சொல்லிக்கொடுக்கிறது
அத்தோடு நின்றுவிடாமல் அரசின் அடியாளாய், கார்ப்ரேட்டின் கண்மூடித்தனமான கைக்கூலியாய் மெல்ல மெல்ல நம்மை மாற்றி சொந்த மக்களுக்கு எதிராக அது நிறுத்திவிடுகிறது
நான் பேசிக்கொண்டிருப்பது வெறும் நாற்பது பக்கமே கொண்ட அருண் நெடுஞ்செழியனின் சூழலியல் அடிப்படைவாதம் என்ற நூல் குறித்துத்தான்
சூழலியல் பற்றி பேசுவதென்பதும் செயல்படுவதென்பதும் ஒரு குறிப்பிட்டாகாலம்வரை குறிப்பிட்ட ஆட்களின் கக்கத்தில்தான் இருந்துவந்தது அதற்காக செயல்பட்ட நிறுவனங்களை ஆட்களைப் பட்டியலிட்டால் அந்த ஆட்கள் யார் , ஏன் பேசினார்கள் என்பதைக்கூட எளிதாக
இனம் கண்டுவிடமுடியும்
பல்வேறு வளச்சுரண்டல்களை கண்கூடாகப்பார்த்துசலித்து கோபம் கொண்ட ஒரு சமூகம், எல்லைகடக்காமல், சாந்த சொரூபியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளும் வேலையை அந்தப் பச்சை பசலிகள் வட்டம் செவ்வனே செய்துவந்தது சமூகத்தின்மேல் அதீத அக்கறைகொண்டவர்கள் என்ற அது விரும்பிய பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டு ஒரு ஒளிவட்டம் அவர்களின் தலைக்குபின்னால் எப்போதும் சுழலுமாறு பார்த்துக்கொண்டது
அப்புரம் என்ன அவர்கள் சொன்னதுதான் வேதவாக்கு
அப்படி விதைக்கப்பட்ட அடிப்படைவாதத்தின் அஸ்திவாரத்தை உடைக்கும் பணிகளை தங்களை அறிந்தோ அறியாமலேயே பல தனிநபர்கள், செய்திருக்கிறார்கள் அவர்களின் பங்கு முக்கியமானது ஆனால் அது இயக்கமாக சமூகப்பொருளாதார அரசியல் பார்வைகளை உள்ளடக்கி விரியாமல் அந்தந்த நபர்களோடு வெற்றுபாண்டமாக உள்ளீடற்று சுருங்கிப்போனது.
யார் அந்த சூழலியல் அடிப்படைவாதிகளாக இருக்கமுடியும்
மக்கள் தொகை பெருக்கம்தான் இத்தனை சூழலியல் சீர்கேடுகளுக்கும் காரணம் அதை சரிசெய்து கட்டுப்படுத்திவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற குரல்களை நாம் கேட்காத நாளே இல்லை என்று சொல்லமுடியும்
ஆனால்
அது எவ்வளவு அபத்தமானது இந்த அரசுதான் சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைக்க பல்லாயிரக்கணக்கான விலை நிலங்களை அன்னிய நிறுவனங்களுக்கு தாரைவார்த்தது அதுபோக நாளொன்றிற்கு லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை உரிஞ்சிக்கொள்ள தாராளமாக அனுமதித்தது அதுபோக சலுகைக்கட்டணத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கியது
இப்படி அள்ளி அள்ளி வழங்கிய இந்த அரசு பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் நோகாமல் நோம்பி கும்பிடும் கார்ப்ரேட்டுகளைப்பற்றி ஒரு வரிகூட எழுதாமல் அவனவன் அளவா பெத்துகிட்டா இதெல்லாம் பிரச்சினைஇல்லையென்று நம்மால் சொல்லவோ எழுதவோ முடியுமென்றால் அது சூழலியல் அடிப்படைவாதம்.
2000த்தில் கோவாவில் கடலோரத்தில் ஒரு இரும்புச்சுரங்ககத்துக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. கொதித்துபோன சூழல்வாதிகள் அதன்பாதிப்புகளை பட்டியலிட்டு நீதிமன்றம் செல்கிறார்கள்
பிரச்சனைகள ’கவன’மாக பரிசீலித்த மாண்புமிகு நீதிபதி, கோவாவில் சுரங்கம் அமைக்கும் பணிக்கு அனுமதியை மறுத்து தீர்ப்பு வழங்குகிறார். நம்ம சூழல்வாதி அளவில்லாத சந்தோசம் கொள்கிறார்கள்’
ஆனால் சுரங்க உரிமையாளர்கள் குத்தகைதாரர்கள்
‘இதனால் 2 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ என்று கட்டைத்தூக்கிக்கொண்டு கோர்ட்டுக்குப்போகிறார்கள். அவர்களின் அக்கறைமிகுந்த கோரிக்கையை ஏற்று
கோர்ட் ஏற்கனவே தான் வழங்கிய
தடையாணையை 21.5.2012 ல் விலக்கிக்கொண்டு சில நிபந்தனைகளுடன் சுரங்கத்தொழிலை திறந்துவிடுகிறது
தலையில் கைவைத்து உட்கார்ந்துகொண்டார்கள் சூழல் போராளிகள்
மக்களை திரட்டி போரட்டங்களை வலுவாக கொண்டு செல்ல பல அரசியல் இயக்கங்கள் கொடுத்த பரிசீலனையை ரீசைக்கிள் பின்னில் போட்டுவிட்டு அவர்களை கேலிசெய்தபடியேதான் கோர்ட் படியில் காலைவைத்தார்கள் . ஆனால் முடிவு அவர்களுக்கு மறக்கமுடியாத பாடத்தை கற்பித்தது
நீதிமன்றம் என்பது சார்பில்லாத அமைப்புபோல் எண்ணிக்கொண்டு நீதிமன்றம் மூலமே எல்லாவற்றையும் சாதித்துவிடமுடியும் என்று சபதம் எடுத்துக்கொண்டு தொட்டது தொன்னூறுக்கும் நீதிமன்றத்துக்கே போய்க்கொண்டிருந்தால், என்னவாகும் என்பதற்கு கோவா ஒரு முதல் உதாரணம் இப்படிப்பட்டவர்களைக்கூட சூழலியல் அடிப்படைவாதிகள் பட்டியலுக்குள் சேர்த்துக்கொள்ளமுடியும்
சூழலியல் நெருக்கடிகள் முற்றி, பிரச்சனைகள் வெடிக்கும் தருவாயில் அரசு எப்போதும் ஒரு நபர் கமிட்டியைப்போடும். அந்த கமிட்டி ஏதோ நாளைக்கே நீதியை நிலைநாட்டிவிடுவதுபோல் ’ஏர்பில்லோ’ சைசில் ஒரு அறிக்கையை கொடுக்கும். நாமும் ’ஆஹாவென்றெழுந்ததுபார்’ ஒரு யுகப்புரட்சியென்று தமுக்கடிப்போம் அப்புறம் என்னவாகும்
என்னவாகும் இதனால் இழப்புகளை சந்திக்கும் நிறுவனங்கள் அந்தக்கமிட்டி கொடுத்த அறிக்கையை எதிர்த்து ஒரு கலவரத்தை உருவாக்கும். அரசு ஒரு மர்மப்புன்னகையோடு அதை அனுமதிக்கும்
அப்புறம் அந்தக்கமிட்டி மறுபடியும் கூடி ’உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம்’ என்று ஒரு நட்ட நடுநிலையில் நின்று கொண்டு புதிய அறிக்கையை தயாரிக்கும்.அரசு என்பது யாருடைய ’ரெப்’ என்ற சிந்தனையே இல்லாமல் அதன் பின்புலம்குறித்து எந்த ஆய்வும் செய்யாமல் அதை தயாரிக்கும் நபரையும் அந்த அறிக்கையையும் ’போற்றிப்பாடடி பெண்ணே’ ரேஞ்சுக்கு தூக்கிச்சுமப்போமானால் நாமும் சூழலியல் அடிப்படைவாதிதான்.
சூழலியல் பிரச்சினை என்பது பல்வேறு சுரண்டலின் மெய்ன் விளைவுதான் ஆனால் அதன் வேர்குறித்து கள்ள மெளனம் சாதிப்பதும் இந்த பிரச்சினை மேகத்திலிருந்து குதித்ததுபோல் கிளைகள் குறித்துமட்டும் அலறிக்கொண்டிருப்பதும் சூழலியல் அடிப்படைவாதத்தின் குணாம்சங்களில் முக்கியமானது... சொல்லப்போனால் அதுவே அது தலையானதுமாகும்
இப்படி அதன் பல்வேறுகுணாம்சங்களை பட்டியலிட்டுப்பேசும் இந்நூல்... சாட்சாத் இதே குணாம்சங்களோடு நடந்துகொண்டிருக்கும் பல்வேறு சம்பவங்களையும் இணைத்துப் பேசியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
ஒரு புதிய பார்வையை கொடுக்கும் அருண் நெடுஞ்செழியனின் இந்த நூல் சரியான காலத்தில் வந்திருக்கிறது . ஆனால் இந்த நூலை யாருக்கு கொடுக்கபோகிறோம் என்ற தெளிவான பார்வையோடு அச்சுக்கோர்க்கத்தொடங்கியிருந்தால்......
எளிமையான வார்த்தைகளும் வாக்கியங்களும் ,கள ஒப்பீடுகளும் மக்களின் சொந்த அனுபவங்களும் கலந்து நல்லவிவாதங்களை முன்னெடுத்திருக்கமுடியும்.
வெளியீடு
ரெட்புக்
விலை ரூபாய் 40
தொடர்புகளுக்கு 9842391963
ரெட்புக்
விலை ரூபாய் 40
தொடர்புகளுக்கு 9842391963
Comments
Post a Comment